Wednesday 7 March 2012

நான் டாக்டராகணும்னு பெற்றோர் ஆசைப்பட்டார்கள்!- விஜய்

Vijay


என்னை டாக்டராக்கணும்னு எங்க அப்பா அம்மா ஆசைப்பட்டாங்க. பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் இந்த நிலைக்கு வந்திருக்கேன், என்றார் நடிகர் விஜய்.

தான் நடித்த நண்பன் படத்தின் விளம்பரத்துக்காக ரசிகர்களை திரையரங்குகளில் சந்தித்துப் பேசி வருகிறார் விஜய்.

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு திரையரங்கில் நடிகர் விஜய் நேற்றைய நண்பன் காலைக் காட்சியின் இடையில் விஜய் தோன்றிப் பேசினார்.

அவர் கூறுகையில், "ரசிகர்கள் என்றைக்கும் எனது நண்பர்கள்தான். எல்லோருக்கும் அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன் போன்ற பல உறவுகள் இருக்கும். ஆனால், நண்பன் ஒருவன் கண்டிப்பாக இருப்பான். எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டோம். ஆனால், அனைத்து விஷயங்களையும் நண்பனிடம்தான் பகிர்ந்து கொள்வோம்.

எனக்கு ப்ரண்ட்ஸ் என்றாலே ஒருவித சந்தோஷம் வந்துவிடும். ப்ரண்ட்ஸுக்குதான் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன்.

இந்தப் படத்தை மட்டுமல்ல, என்னுடைய எல்லா திரைப்படத்தையும் வெற்றிப் படமாக்குவதற்கு இரவு, பகல் பாராது சுவரொட்டி ஒட்டியும், தோரணம் கட்டியும், பட்டாசு வெடித்தும் எனக்காக ரசிகர்களாகிய நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள். எனக்கு ஒரேயொரு சின்ன ஆசை. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் மீது அன்பு செலுத்தும் உங்களுக்காக நண்பன் படத்தில் சில யோசனைகளை கூறியுள்ளேன். என்னுடைய மத்த படங்கள் மாதிரியில்லாமல், இந்தப் படத்தின் வசனங்களை நானே உங்களுக்காக பேசியுள்ளேன்.

என்னைப் பொருத்தவரை நீங்கள் எல்லோரும் என் நண்பர்கள். உங்கள் துறைகளில் முயற்சி செய்யுங்கள். அந்த துறையில் உங்களால் நம்பர் 1 ஆக வரமுடியும். நாம் வராவிட்டால் வேறு யார் வரப்போகிறார்கள்?

டாக்டராகணும்னு ஆசைப்பட்டாங்க...

என் வாழ்க்கையில் போராட்டங்களை அனுபவித்திருக்கிறேன். என்னை டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் எங்கப்பா அம்மா ஆசை. எனது இளமைக் காலம் ஒரு போராட்டம்தான். பெரும் போராட்டத்துக்கு பிறகு எனக்குப் பிடித்த இத் துறையில் முயன்று இந் நிலைக்கு வந்துள்ளேன்," என்றார்.

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...